நீ மேலே உயரும்போது நீ யார் என்று உன் நண்பர்கள் அறிந்து கொள்வார்கள் நீ கீழே போகும்போதுதான் உண்மையான நண்பர்கள் யார் என்று நீ அறிந்து கொள்வாய்...

4.08.2012

எம்.ஜி.ஆர். வாழ்க்கைப்பாதை (2)

எம்.ஜி.ஆர். வாழ்க்கைப்பாதை  - தேர்தலில் வெற்றி
 தேர்தலில் வெற்றி:
 
1967 தேர்தலில் பரங்கிமலை தொகுதியில் எம்.ஜி.ஆர். போட்டியிட்டார். தேர்தல் நெருங்கிக்கொண்டிருந்தபோது, ராமாவரம் தோட்டத்தில் உள்ள தன் வீட்டில் எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். சுட்டவர் எம்.ஆர்.ராதா. எமனுடன் போராடி எம்.ஜி.ஆர். உயிர் பிழைத்தார். எம்.ஜி.ஆரை சுட்டுக்கொல்ல முயன்றதாகவும், தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும் எம்.ஆர்.ராதா மீது வழக்குத் தொடரப்பட்டது.
 
இதில் ராதாவுக்கு ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. எம்.ஜி.ஆரின் நூறாவது படம் "ஒளி விளக்கு". இது ஜெமினி எஸ்.எஸ்.வாசன் தயாரிப்பு. எம்.ஜி.ஆர். நடித்த முதல் படமான "சதிலீலாவதி"யின் கதையை எழுதியவர் எஸ்.எஸ்.வாசன். எம்.ஜி.ஆரின் 100_வது படத்தை தயாரித்தவரும் வாசன். `1967 தேர்தலில் தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று பேரறிஞர் அண்ணா முதல்வர் ஆனார்.
 
ஆனால் 1 ஆண்டு காலத்தில் காலமானார். அண்ணாவை அடுத்து கருணாநிதி முதல்_அமைச்சர் ஆனார். அவர் முதல்வராக வேண்டும் என்று பாடுபட்டவர்களில் எம்.ஜி.ஆர். முக்கியமானவர். திரை உலகிலும் சரி, அரசியலிலும் சரி கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் நெருங்கிய நண்பர்களாக விளங்கினர்.
 
ஆனால் 1971_க்குப்பிறகு, யாரும் எதிர்பராத வகையில், கருத்து வேற்றுமை ஏற்பட்டு நண்பர்கள் இருவரும் பிரிந்தனர். 1972 அக்டோபர் 18_ந்தேதி "அண்ணா தி.மு.க" என்ற கட்சியை எம்.ஜி.ஆர். தொடங்கினார். கட்சி ஆரம்பித்து ஏழே மாதங்களில், திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.
 
1977 மார்ச் மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தனது கடைசிப்படமான "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" படத்தில் பாக்கியிருந்த ஒரு சில காட்சிகளை முடித்துக்கொடுத்துவிட்டு, 1977 ஜுன் 30_ந்தேதி தமது 60_வது வயதில், தமிழக முதல்_அமைச்சராக எம்.ஜி.ஆர். பதவி ஏற்றார்.