நீ மேலே உயரும்போது நீ யார் என்று உன் நண்பர்கள் அறிந்து கொள்வார்கள் நீ கீழே போகும்போதுதான் உண்மையான நண்பர்கள் யார் என்று நீ அறிந்து கொள்வாய்...

4.08.2012

இலங்கை ஜனாதிபதி சந்திரிகாவின் கணவர் சுட்டுக்கொலை

இலங்கை ஜனாதிபதி சந்திரிகாவின் கணவர் சுட்டுக்கொலை
  ஸ்ரீமாவோ பண்டாரநாயகாவின் இளைய மகள் சந்திரிகா சந்திரிகாவுக்கும், விஜயகுமார ரணதுங்காவுக்கும் திருமணம் நடந்தது. ரணதுங்கா பிரபல நடிகர்.   1969 ம் ஆண்டில் ரணதுங்கா நடித்த முதல் சினிமா படமான "அந்தனே கதரேலி" வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து அவர் 100 க்கும் அதிகமான படங்களில் கதாநாயகனாக நடித்தார்.   1978 ம் ஆண்டில் ரணதுங்கா அரசியலில் நுழைந்தார்.
 
முதலில் தனது மாமியார் ஸ்ரீமாவோ பண்டாரநாயகாவின் "ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சியில் சேர்ந்து பணியாற்றினார். பிறகு மாமியாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு லங்கா மகாஜன கட்சியை தொடங்கினார், ரணதுங்கா. அவருடைய கட்சியே பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது. இந்த புதிய கட்சியின் தலைவராக ரணதுங்காவும், பொதுச்செயலாளராக சந்திரிகாவும் இருந்தார்கள்.
 
இந்த நிலையில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிபராக (ஜனாதிபதி) ஜெயவர்த்தனா பதவி வகித்தார்.   1988 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரணதுங்கா புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கினார். ரஷிய ஆதரவு கம்யூனிஸ்டு கட்சி, டிராப்ஸ்கிய சமசமாஜ கட்சி ஆகிய கட்சிகளை சேர்த்து சோசலிச கூட்டணி அமைத்தார். இந்த கூட்டணியின் சார்பில் அதிபர் பதவிக்கு ரணதுங்கா நிறுத்தப்பட்டார்.
 
சுட்டுக்கொலை ரணதுங்கா கொழும்பில் இருந்து 9 மைல் தூரத்தில் இருக்கும் `பொலங் கொடா' என்ற இடத்தில் வசித்து வந்தார். 16.2.1988 அன்று காலை 11.30 மணி அளவில் வீட்டு வராண்டாவில் அமர்ந்து கட்சிப் பிரமுகர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ரணதுங்காவை நோக்கி இயந்திர துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
 
குண்டுகள் ரணதுங்கா உடலை சல்லடை போல துளைத்தன. 9 குண்டுகள் உடலில் பாய்ந்தன. அடையாளம் தெரியாதபடி அவரது முகம் சிதைந்தது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். டாக்டர்கள் உடலை பரிசோதித்துவிட்டு, ரணதுங்கா ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர். ரணதுங்காவை சுட்டவர்கள் அதே மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டனர்.
 
ஆனால் அவர்கள் கொண்டு வந்த ஒரு சூட்கேஸ், தலையில் அணியும் "டோபா" (விக்) ஆகியவை தரையில் விழுந்து கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினார்கள். கொலையாளிகள் மாறுவேடத்தில் வந்தது ஊர்ஜிதமானது. ரணதுங்கா சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி, ரேடியோவில் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இலங்கை முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
 
ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் அவரது வீட்டில் கூடினார்கள். சம்பவம் நடந்தபோது ரணதுங்காவின் மாமியாரான ஸ்ரீமாவோ பண்டாரநாயகா கிராமத்தில் உள்ள தன் வீட்டில் இருந்தார். மருமகன் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் தெரிந்ததும், அவர் கொழும்புக்கு விரைந்து வந்தார். சுட்டுக் கொல்லப்பட்டபோது ரணதுங்காவுக்கு வயது 43.
 
மனைவி சந்திரிகாவும், 2 குழந்தைகளும் இருந்தார்கள்.   ரணதுங்கா இடதுசாரி கொள்கையில் தீவிர ஈடுபாடு கொண்டவர். ரணதுங்கா சிங்களவராக இருந்தாலும், இலங்கை தமிழர்கள் மீது அனுதாபம் உடையவர். இந்தியா இலங்கை ஒப்பந்தத்தை தீவிரமாக ஆதரித்து வந்தார். இலங்கை ராணுவமும், விடுதலைப்புலிகளும் போரை நிறுத்தவேண்டும்.
 
ராணுவ நடவடிக்கைகளை கைவிட்டு பேச்சு நடத்தவேண்டும் என்று ரணதுங்கா தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். அவர் பலமுறை யாழ்ப்பாணம் சென்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களையும், மற்ற இலங்கை தமிழர் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். தேர்தலில் தனது கூட்டணியில் சேரும்படி ஈழம் மக்கள் புரட்சி முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) மக்கள் விடுதலை தமிழ் ஈழ அமைப்பு (பிளாட்) ஆகியவற்றுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.  
 
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு சமரசத் தீர்வு ஏற்பட தனிப்பட்ட முறையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இதற்காக மனைவி சந்திரிகாவுடன் 1986 ம் ஆண்டு ஜுன் மாதம் தமிழ்நாட்டுக்கு வந்தார். 3 நாட்கள் சென் னையில் தங்கி தமிழக தலைவர்கள், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர்கள் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
 
இங்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் ரணதுங்கா பேசுகையில், "மனிதாபிமான அடிப்படையில் நல்லெண்ண தூதுவனாக வந்து இருக்கிறேன். இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும்படி அதிபர் ஜெயவர்த்தனாவை வற்புறுத்திக்கொண்டே இருப்பேன்" என்று கூறினார்.   மறைந்த முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரை ரணதுங்கா சந்தித்துப் பேசினார்.
 
இருவரும் 1 மணி நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். சென்னை ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. இலங்கை தமிழர் பிரச்சினை பற்றியும், ஜெயவர்த்தனாவுடன் நடத்த இருக்கும் பேச்சு பற்றியும் எம்.ஜி.ஆரிடம் ரணதுங்கா கூறினார்.
 
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்க ஆலோசகர் பாலசிங்கம், தமிழ் ஈழ மக்கள் விடுதலை இயக்க தலைவர் உமாமகேசுவரன், ஈழபுரட்சிகர அமைப்பு (ஈராஸ்), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ) ஆகியவற்றை சேர்ந்த தலைவர்களை சந்தித்துப் பேசினார். "மீண்டும் இந்தியா வருவேன்.
 
பிரதமர் ராஜீவ் காந்தியை சந்தித்து பேசுவேன்" என்று ரணதுங்கா கூறிவிட்டு இலங்கைக்குப் புறப்பட்டுச் சென்றார். ஆனால், சமரச முயற்சியை தொடரும்முன், துப்பாக்கி குண்டுக்கு இரையாகிவிட்டார். ரணதுங்கா தமிழர்களை ஆதரிப்பது சிங்கள வெறியர்களுக்கு பிடிக்கவில்லை. அவருடைய கொலைக்கு இதுவும் முக்கிய காரணம் என்று கூறப்பட்டது.