லண்டன் சென்ற இந்தியத் தலைவர்களுடன், பிரிட்டிஷ் பிரதமர்
ஆட்லி, இந்திய விவகார மந்திரி பெதிக் லாரன்ஸ் ஆகியோர் பேச்சுவார்த்தை
நடத்தினார்கள். காங்கிரஸ் தலைவர்களுக்கும், முஸ்லிம் லீக் தலைவர்களுக்கும்
ஒற்றுமை ஏற்படுத்த உண்மையாகவே முயன்றனர். பேச்சுவார்த்தை பல நாட்கள்
நீடித்தது.
பேச்சு வார்த்தை நடைபெறும்போதே,
லண்டனில் பல கூட்டங்களில் ஜின்னா பேசினார். "பாகிஸ்தான் கோரிக்கையை
பிரிட்டிஷ் அரசு ஏற்காவிட்டால், இந்தியாவில் உள்நாட்டுக் கலவரம் ஏற்படும்"
என்று எச்சரிக்கை விடுத்தார். பேச்சுவார்த்தை முடிவில், பிரதமர் ஆட்லி,
வரலாற்றுச் சிறப்பு மிக்க பிரகடனம் ஒன்றை வெளியிட்டார். அந்தப் பிரகடனம்
வருமாறு:_
"இந்தியாவின் இருபெரும் கட்சிகளான
காங்கிரஸ், முஸ்லிம் லீக் இடையே ஒற்றுமை ஏற்படுத்த நடந்த முயற்சிகள் தோல்வி
அடைந்ததால், இந்தியாவில் அபாயகரமான சூழ்நிலை உருவாகியிருப்பதை பிரிட்டிஷ்
அரசு உணருகிறது. 1948 ஜுன் மாதத்துக்கு முன், இந்தியர்களிடம் அதிகாரத்தை
ஒப்படைத்து விடுவது என்று, எனது அரசு முடிவு செய்திருக்கிறது.
அதிகாரத்தை
யாரிடம் ஒப்படைப்பது என்று பிரிட்டிஷ் அரசு தீர்மானிக்க வேண்டியுள்ளது.
ஒருவேளை அது சாத்தியமற்றதாகி விட்டால், இப்போதுள்ள மாகாண அரசுகளிடமே
அதிகாரத்தை ஒப்படைத்து விடலாமா, அல்லது வேறு ஏதேனும் நல்ல வழி உள்ளதா என்று
பிரிட்டிஷ் அரசு ஆலோசிக்கும்.
இதற்கிடையே,
இந்தியாவில் இப்போது வைஸ்ராயாக பதவி வகிக்கும் வேவல், இங்கிலாந்துக்கு
திருப்பி அழைக்கப்படுகிறார். அவருக்குப்பதிலாக, புதிய வைஸ்ராயாக லார்டு
மவுண்ட்பேட்டன் நியமிக்கப்படுகிறார். 1947 மார்ச் மாதம் அவர் பதவி ஏற்பார்.
அவருடைய முக்கிய வேலை, ஆட்சிப் பொறுப்பை இந்தியர்களிடம் நல்ல முறையில்
ஒப்படைத்துவிட்டு திரும்புவதுதான்."
இவ்வாறு ஆட்லி அறிவித்தார்.
இதற்கிடையே
இந்தியாவுக்கு சுதந்திரம் அளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து,
இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில், ஆட்லி அரசு மீது நம்பிக்கை இல்லாத்
தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தின் மீது சர்ச்சில் பேசுகையில்,
"இந்தியர்கள் அற்ப்பதர்கள். அவர்களுக்குப் பயந்து இந்தியாவில் இருந்து
வெளியேறுவது இழுக்கு" என்று கூறினார்.
சைமன் கமிஷன்
தலைவராக இந்தியாவுக்கு வந்து அவமானப்பட்ட சைமனும், நம்பிக்கை இல்லாத்
தீர்மானத்தை ஆதரித்துப் பேசினார். ஒரு கட்டத்தில், இந்தத் தீர்மானம்
நிறைவேறிவிடுமோ என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், முன்பு இந்தியாவில் வைஸ்ராயாக
இருந்து, காந்தியடிகளுடன் உடன்பாடு கண்ட நல்லவரான இர்வின் பிரபு,
இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி
உணர்ச்சிகரமாகவும், ஆணித்தரமாகவும் பேசினார்.
அவருடைய
பேச்சு பாராளுமன்ற உறுப்பினர்களின் மனதில் இந்தியா மீது அனுதாபம் ஏற்படச்
செய்தது. முடிவில் ஓட்டெடுப்பு நடந்தது. நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துக்கு
ஆதரவாக 185 பேரும், எதிராக 337 பேரும் ஓட்டளித்தனர். தீர்மானம் தோல்வி
அடைந்தது. இந்திய சுதந்திரத்துக்கு பிரிட்டிஷ் பாராளுமன்றம் மறைமுகமாக
அங்கீகாரம் அளித்துவிட்டது. அதனால் இந்தியத் தலைவர்கள் மகிழ்ச்சி
அடைந்தனர்.
மவுண்ட்பேட்டன் வருகை ஆட்லி
அறிவித்தபடி, வைஸ்ராய் வேவல் 1947 மார்ச் 23_ந்தேதி இந்தியாவிலிருந்து
லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றார். அதற்கு மறுநாள், புதிய வைஸ்ராயாக
லார்டு மவுண்ட்பேட்டன் பதவி ஏற்றார். பதவி ஏற்றதும் இந்தியத் தலைவர்களை
ஒவ்வொருவராகவும், கூட்டாகவும் அழைத்து இந்திய சுதந்திரம் பற்றி அவர்களுடைய
ஆலோசனையைக் கேட்டார்.
காந்தியை அழைத்துப்
பேசியபோது, "பிரிவினை தவிர நீங்கள் வேறு எதைச்சொன்னாலும் ஏற்கிறேன்" என்று
காந்தி தெரிவித்தார். "அப்படியானால், இந்தப் பிரச்சினைக்கு எப்படித் தீர்வு
காண்பது? பிரிவினையைத் தவிர்க்க, தேசப் பிதாவான உங்கள் யோசனை என்ன?"என்று
மவுண்ட்பேட்டன் கேட்டார். "ஜின்னாவை பிரதமராக்கி அவர் விரும்புகிறவர்களைக்
கொண்ட மந்திரிசபை அமைக்கலாம்" என்று காந்தி தெரிவித்தார்.
இதுபற்றி
இந்தியத் தலைவர்களின் கருத்தை மவுண்ட்பேட்டன் கேட்டார். காந்தியின்
யோசனைக்கு நேருவும், பட்டேலும் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாகக்
காந்தி தன் யோசனையை வாபஸ் பெற்றுக்கொண்டார். பிரிவினை ஒன்றே வழி எல்லாத்
தலைவர்களுடனும் பேச்சு நடத்தியபிறகு. "இந்தியா சுதந்திரம் அடைவதற்கு,
பிரிவினை ஒன்றுதான் வழி" என்ற முடிவுக்கு வந்தார் மவுண்ட்பேட்டன்.
இதனைத்தொடர்ந்து
வல்லபாய் படேலை அழைத்துப் பேசினார். "ஒற்றுமை இல்லாத _ பலமற்ற பெரிய
இந்தியாவைவிட, பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின் அமையும் சுதந்திர இந்தியா
வலுவானதாக இருக்கும்" என்று கூறினார். அவருடைய கருத்தில் உள்ள நியாயத்தை
உணர்ந்த படேல், பிரிவினைக்குச் சம்மதித்தார். அடுத்து நேருவின் நண்பரும்,
சிறந்த ராஜதந்திரியுமான கிருஷ்ணமேனனை அழைத்துப்பேசினார்.
"இந்தியா
சுதந்திரம் அடையவேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி பாகிஸ்தான் பிரிவினைக்கு
காங்கிரஸ் தலைவர்களை சம்மதிக்கச் செய்வதுதான்" என்று ஆணித்தரமாக
எடுத்துக்கூறி, கிருஷ்ணமேனனைச் சம்மதிக்கச் செய்தார். பிறகு கிருஷ்ணமேனன்,
நேருவைச் சந்தித்து, வைஸ்ராயுடன் தான் நடத்திய பேச்சுவிவரத்தைத்
தெரிவித்தார்.
"இந்தியாவுக்கு உடனடியாக சுதந்திரம்
கொடுக்க பிரிட்டிஷார் தயாராகி விட்டார்கள். பாகிஸ்தான் கோரிக்கை
மட்டும்தான் முட்டுக்கட்டையாக இருக்கிறது. ஜின்னாவும், நாமும் ஒன்றுபட்டு
வாழ்வது நடக்காத காரியம். பிரிவினைக்குச் சம்மதித்து, இந்தியாவுக்குச்
சுதந்திரம் வாங்குவதுதான் புத்திசாலித்தனம்" என்று கிருஷ்ணமேனன் கூறினார்.
இதுபற்றி
தீவிரமாக யோசித்த நேரு பிரிவினைக்குத் தனது சம்மதத்தைத் தெரிவித்தார்.
பிரதமர் நேருவும், படேலும் பிரிவினைக்குச் சம்மதித்துவிட்ட பிறகு,
காந்திஜியைச் சந்தித்தார், மவுண்ட்பேட்டன். தலைவர்களுடன் நடத்திய பேச்சு
பற்றியும், பிரிவினைக்கு காங்கிரஸ் தலைவர்கள் சம்மதித்துவிட்டது பற்றியும்
தெரிவித்தார்.
பிரிவினைக்கு கடும் எதிர்ப்புத்
தெரிவித்தார், காந்தி. "என் பிணத்தின் மீதுதான் பிரிவினையை அமுலுக்கு
கொண்டு வரமுடியும்" என்றார். அபுல்கலாம் ஆசாத்தும் பிரிவினையை எதிர்த்தார்.
பிரிவினை பற்றி தலைவர்களிடையே விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, வடநாட்டில்
மீண்டும் கலவரம் வெடித்தது. பல நகரங்கள் தீப்பற்றி எரிந்தன.
காந்திஜியை
நேருவும் மற்ற தலைவர்களும் சந்தித்து, பாகிஸ்தான் பிரிவினைக்கு
சம்மதிக்கும்படி வேண்டினார்கள். முடிவில், "இந்தியா சுதந்திரம்
அடையவேண்டும் என்பதே என் லட்சியம். இந்தியா சுதந்திரம் பெறவும், வகுப்புக்
கலவரங்களுக்கு முடிவு காணவும் பாகிஸ்தான் பிரிவினைக்கு சம்மதிக்கிறேன்"
என்று காந்தி கூறினார்.
இதன்பின் நேரு, ஜின்னா,
சீக்கிய தலைவர் பல்தேவ்சிங் ஆகிய மூவரும் ரேடியோவில் தனித்தனியே
பேசினார்கள். "தேசப்பிரிவினை கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது"
என்று அவர்கள் அறிவித்தார்கள். பாகிஸ்தான் பிரிவினைக்கு ஏற்பாடு நடக்கிறது
என்பதை அறிந்ததும், பஞ்சாபிலும், வங்காளத்திலும் தனி நாடு கோரிக்கை
எழுந்தது.
"பஞ்சாப் பஞ்சாபியருக்கே", "வங்காளம்
வங்காளியருக்கே" என்று குரல் எழுப்பினார்கள். இந்நிலையில், வைஸ்ராய்
மவுண்ட்பேட்டன் 18_5_1946_ல் லண்டனுக்குச் சென்றார். பிரதமர் ஆட்லியுடனும்,
இந்திய விவகார மந்திரி லாரன்சுடனும் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஓர் இறுதி
முடிவுடன் 31_5_1946_ல் இந்தியா திரும்பினார். மவுண்ட்பேட்டன் தன்
திட்டத்தை, இந்தியத் தலைவர்களிடம் தெரிவித்து அவர்களுடைய ஆதரவைக் கோரினார்.
அந்தத் திட்டம் வருமாறு:_
(1)
1948 ஜுன் மாதத்துக்குள் இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கப்படும் என்று
இங்கிலாந்துப் பிரதமர் ஆட்லி முன்பு அறிவித்தார். அது மாற்றப்பட்டு 1947
ஆகஸ்ட் 15_ந்தேதியே சுதந்திரம் தருவதென்று, பிரிட்டிஷ் அரசாங்கம் முடிவு
செய்துள்ளது.
(2) முஸ்லிம்கள் பெரும்பான்மையாக
வாழும் பகுதிகள் பிரிக்கப்பட்டு, பாகிஸ்தான் என்ற சுதந்திர நாடு
அமைக்கப்படும். பஞ்சாப்பைச் சார்ந்த பகுதிகள் மேற்கு பாகிஸ்தானாகவும்,
வங்காளத்தைச் சேர்ந்த பகுதிகள் கிழக்கு பாகிஸ்தானாகவும் அமையும்.
(3)
இதுவரை பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்த அதிகாரங்கள், இந்தியாவுக்கும்,
பாகிஸ்தானுக்கும் மாற்றப்படும். _ இதுவே, மவுண்ட்பேட்டன் அறிவித்த திட்டம்.
காந்தி ஒப்புதல் இந்தத் திட்டத்தைக் காந்தியிடம்
கொண்டு போய்க்காட்டினார், மவுண்ட்பேட்டன். அப்போது காந்தி, மவுன விரதத்தில்
இருந்தார். அதனால், தன்னுடைய ஒப்புதலையும் மகிழ்ச்சியையும் அவர்
எழுதிக்காட்டினார். ஜுன் 10_ந்தேதி முஸ்லிம் லீக் பேரவை கூடி,
மவுண்ட்பேட்டனின் திட்டத்தை ஆதரிப்பதாக அறிவித்தது.
காங்கிரஸ்
கமிட்டி மவுண்ட் பேட்டனின் திட்டம் பற்றி ஆலோசிக்க, அகில இந்தியக்
காங்கிரஸ் கமிட்டி ஜுன் 14_ந்தேதி கூடியது. இந்தக் கூட்டத்தில் காந்திஜி
உருக்கமாகப் பேசினார். "இந்தியா விடுதலை பெறவேண்டும் என்பதற்காகவே
பிரிவினைக்குச் சம்மதிக்கிறேன்" என்று கூறினார். விவாதத்தின் முடிவில்
ஓட்டெடுப்பு நடந்தது.
பிரிவினைக்கு ஆதரவாக நேரு,
பட்டேல், கோவிந்த வல்லபபந்த் உள்பட 157 பேரும், எதிர்த்து 29 பேரும்
ஓட்டளித்தனர். 32 பேர் நடுநிலைமை வகித்தனர். கவனர் ஜெனரல் பதவி
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் கொஞ்ச காலம் மவுண்ட்பேட்டனே கவர்னர்
ஜெனரலாக இருப்பதற்கு காங்கிரசும், முஸ்லிம் லீக்கும் இசைவு தந்திருந்தன.
பிறகு
ஜின்னா தன் கருத்தை மாற்றிக்கொண்டு, "சுதந்திர பாகிஸ்தானின் முதல் கவர்னர்
ஜெனரலாக நானே பொறுப்பேற்கப் போகிறேன்" என்று அறிவித்தார். ஆனால் காங்கிரஸ்
தலைவர்கள் முன்பு ஒப்புக்கொண்டபடி, மவுண்ட்பேட்டனே சுதந்திர இந்தியக்
கவர்னர் ஜெனரலாக இருக்கவேண்டுமெனத் தீர்மானித்தனர்.
அரசாங்க
சொத்தைப் பிரிப்பது, ராணுவத்தைப் பிரிப்பது ஆகிய பணிகளைக் குறித்த
நேரத்தில் மவுண்ட்பேட்டன் செய்து முடித்தார். பிரதமர் நேருவும், மற்ற
மந்திரிகளும் அதற்குத் துணை புரிந்தனர். தேசியக்கொடி அசோகச் சக்கரம்
பொறித்த மூவர்ணக் கொடியை இந்தியாவின் தேசியக் கொடியாக ஏற்க, இந்திய அரசியல்
நிர்ணய சபை முடிவு செய்தது. கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய "ஜனகணமன"
என்ற பாடல், இந்தியாவின் தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டது.