இந்தியாவின்
கவனம் முழுவதும் மேற்கு எல்லையிலும், காஷ்மீர் பகுதியிலும்தான் இருக்கும்.
கிழக்குப் பாகிஸ்தானில் அது தாக்குதல் நடத்தாது என்று பாகிஸ்தான்
சர்வாதிகாரி யாகியாகான் நினைத்திருந்தார். அது தப்புக்கணக்காகியது.
கிழக்குப் பாகிஸ்தானில் உள்ள டாக்கா விமான தளத்தில் 20 போர் விமானங்களை
பாகிஸ்தான் நிறுத்தி வைத்திருந்தது. இந்திய விமானங்கள் குண்டு வீசி, இந்த
20 விமானங்களையும் அழித்தன. விக்ரந்த் என்ற இந்தியப் போர்க் கப்பலைத்
தகர்ப்பதற்காக, கராச்சியில் இருந்து புறப்பட்டு வந்த காஜி என்ற பெயருடைய
பாகிஸ்தான் நீர்மூழ்கிக் கப்பலை (2,500 டன் எடையுள்ளது) இந்திய கப்பல் படை
கண்டுபிடித்து அழித்தது.
பாகிஸ்தான்
கப்பல்கள் கிழக்கு பாகிஸ்தானுக்கு வரமுடியாதபடி முற்றுகையிடப்பட்டன. இந்த
சமயத்தில் பாகிஸ்தான் சர்வாதி கார ஆட்சிக்கு எதிராக கிழக்குப் பாகிஸ்தான்
மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். முஜிபுர் ரகிமானின் ஆதரவாளர்கள்
முக்திவாகினி என்ற படையை அமைத்து, பாகிஸ்தான் ராணுவத்துடன் போரிட்டனர்.
கிழக்குப் பாகிஸ்தான் மக்களின் சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவு
அளிப்பதென்று இந்தியா முடிவு செய்தது. இந்திய ராணுவ வீரர்கள் விமானங்களில்
சென்று, கிழக்குப் பாகிஸ்தான் தலைநகரான டாக்காவைச் சுற்றிலும் பாரசூட்
மூலம் குதித்தனர். இந்திய ராணுவத்தினரும், முக்திவாகினி படையினரும்
டாக்காவைச் சுற்றி முற்றுகையிட்டனர்.
பாக்.ராணுவம்
சரணாகதி தளபதி நியாஜி தலைமையில் டாக்காவில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட
பாகிஸ்தான் ராணுவத்தினர் இருந்தனர். இந்திய வீரர்களுடன் போரிட்டால்
பாகிஸ்தான் படைகள் அடியோடு அழிவது நிச்சயம் என்பதை நியாஜி புரிந்து
கொண்டார். டிசம்பர் 16_ந்தேதி மாலை 4.31 மணிக்கு இந்திய ராணுவத்திடம் சரண்
அடைந்தார். அதே சமயம் மேற்கு முனையிலும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு அடிமேல்
அடி கிடைத்தது. இன்னும் சில மணி நேரத்தில் லாகூரை இந்திய ராணுவம்
கைப்பற்றிவிடும் நிலைமை ஏற்பட்டது. அதனால் போர் நிறுத்தத்துக்கு யாகியா
கான் சம்மதித்தார். டிசம்பர் 17_ந்தேதி மேற்கு முனையிலும் போர் ஓய்ந்தது.
1971_ல்
இரண்டு வாரங்கள் நடந்த இந்தியா _பாகிஸ்தான் போரில் இந்தியாவுக்கு கிடைத்த
வெற்றி பிரதமர் இந்திரா காந்தியின் புகழையும், மதிப்பையும் உலக அரங்கில்
உயர்த்தியது. அவருடைய ராஜ தந்திரத்தால் கிழக்குப் பாகிஸ்தான்
விடுவிக்கப்பட்டு வங்காள தேசம் என்ற பெயரில் சுதந்திர நாடாகியது.
வங்காளதேசம் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டதும் பாகிஸ்தான் சிறையில் இருந்த
முஜிபுர் ரகிமான் விடுதலை செய்யப்பட்டார்.
அவர்
வங்காளதேசத்துக்கு செல்லும் வழியில் டெல்லி விமான நிலையத்தில் பிரதமர்
இந்திரா காந்தியும், மற்ற மந்திரிகளும் அவரை வரவேற்றனர். பின்னர் நடைபெற்ற
மாபெரும் பொதுக்கூட்டத்தில் முஜிபுர் ரகிமான் பேசுகையில் வங்காள
தேசத்துக்கு சுதந்திரம் கிடைக்க இந்திரா காந்தி செய்த உதவிக்கு நன்றி
தெரிவித்தார்.
"இந்திரா
காந்தி, இந்திய தேசத்துக்கு மட்டுமல்ல மனித குலத்துக்கே தலைவி" என்று
புகழாரம் சூட்டினார். இந்திரா காந்தி பேசுகையில் "ரகிமானின் உடலைத்தான்
பாகிஸ்தானில் சிறை வைத்தார்கள். அவருடைய ஆன்மாவை சிறை வைக்க முடியவில்லை.
அதனால்தான் வங்காளதேச மக்கள் எழுச்சியுடன் போராடி, தங்கள் நாட்டுக்கு
சுதந்திரம் பெற்றனர்" என்று குறிப்பிட்டார்.
ரகிமான்
வங்காளதேசம் சென்று அந்த நாட்டின் அதிபரானார். பாகிஸ்தான் பிரதமராக பூட்டோ
பதவி ஏற்றார். போரில் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட சேதங்கள் ஏராளம். கிழக்கு
பாகிஸ்தானை (வங்காளதேசத்தை) பறிகொடுத்ததுடன் காஷ்மீரில் 374 சதுர மைல்
பிரதேசத்தையும், பஞ்சாபில் 374 சதுர மைலையும் சிந்து _ கட்ச் பகுதியில்
4,745 சதுர மைல் பிரதேசத்தையும் அது இழந்திருந்தது. அத்துடன் 246
டாங்கிகள், 94 விமானங்கள், 2 போர்க்கப்பல்கள், 2 நீர்மூழ்கிக் கப்பல்கள்
ஆகியவற்றையும் அது இழந்தது. உயிர்ச்சேதம் பற்றிய விவரத்தை பாகிஸ்தான்
அறிவிக்கவில்லை.
எனினும்
இந்தியாவுக்கு ஏற்பட்ட சேதத்தைவிட பல மடங்கு அதிகம் என்று கருதப்படுகிறது.
இந்தியா 73 டாங்கிகளையும், 45 விமானங்களையும் இழந்தது. 3,238 இந்திய
வீரர்கள் கொல்லப்பட்டனர். 617 பேர் போர்க் கைதிகளாகச் சிறை
பிடிக்கப்பட்டனர். பிரதமர் இந்திரா காந்தியும், பாகிஸ்தான் பிரதமர்
பூட்டோவும் 1972 ஜுன் மாத இறுதியில் சிம்லாவில் சந்தித்துப் பேசினார்கள். 5
நாட்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சமரச உடன்பாடு ஏற்பட்டது. இந்தியா _
பாகிஸ்தான் பிரச்சினைகளை இரு நாடுகளும் சமாதான முறையில் பேசித்
தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற சிம்லா ஒப்பந்தம் ஜுலை 2_ந்தேதி
கையெழுத்தாகியது. ஒப்பந்தத்தில் இந்திராவும், பூட்டோவும் கையெழுத்திட்டனர்.