1981_ம்
ஆண்டில், சீக்கிய தீவிரவாதிகள் "தனி நாடு" வேண்டும் என்று கோரி,
பிந்தரன்வாலே தலைமையில் வன்முறையில் ஈடுபட்டனர். பிந்தரன்வாலே இவ்வளவு
தூரம் வளர்ந்ததற்கு சஞ்சய் காந்தியும் காரணம் என்று வரலாற்று ஆசிரியர்கள்
கூறுகிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில், சீக்கியர் கட்சி ("அகாலி தளம்") அசுர
வேகத்தில் வளர்ந்து வந்தது. 1977 தேர்தலில் அந்த மாநிலத்தில் காங்கிரசை
அகாலி தளம் தோற்கடித்தது. பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்_மந்திரி
ஜெயில்சிங் (பிற்காலத்தில் ஜனாதிபதி ஆனவர்) சஞ்சய் காந்தியிடம் ஒரு
யோசனையைத் தெரிவித்தார்.
"பஞ்சாப்
மாநிலத்தில் காங்கிரஸ் வளரவேண்டுமானால், அகாலி தளம் கட்சியை உடைக்க
வேண்டும். அகாலி தளத்தில் உள்ள இளைஞர்களைப் பிடித்து ஊக்கம் கொடுத்து,
அவர்களைக் கொண்டு அகாலி தளத்தைப் பிளக்க வேண்டும்" என்பதே ஜெயில்சிங்
தெரிவித்த யோசனை. அப்போது சஞ்சய் காந்தியால் அடையாளம் காணப்பட்ட சீக்கிய
இளைஞன்தான் பிந்தரன்வாலே. 1980 தேர்தலில், பஞ்சாப் மாநிலத்தில் 3
தொகுதிகளில் அவன் காங்கிரசை ஆதரித்துப் பிரசாரம் செய்தான். இந்திரா
காந்தியுடன் ஒரே மேடையில் பேசினான். தீவிரவாதிகளின் தலைவன்
பிந்தரன்வாலேயின் புகழ் பரவியது. சீக்கியர்களின் "ஹீரோ" ஆனான். அவன்
போக்கும் மாறியது.
சீக்கியர்களுக்கு
தனி சுதந்திர நாடு ("காலிஸ்தான்") வேண்டும் என்று குரல் எழுப்பினான்.
தீவிரவாதிகளைத் திரட்டி வன்முறையில் ஈடுபட்டான். பிந்தரன்வாலேயின் போக்கைக்
கண்டித்து எழுதி வந்த லாலா ஜெகத் நாராயணன் என்ற பஞ்சாப் பத்திரிகை
ஆசிரியர், 1981 செப்டம்பர் 9_ந்தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த
கொலையின் பின்னணியில் இருந்தவன் பிந்தரன்வாலே என்று தெரிந்து, அவனை
போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பிந்தரன்வாலேக்கு
ஆதரவாக சீக்கியர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். அதனால் அவன் விடுதலை
செய்யப்பட்டான். அவனுக்கு சீக்கியர்கள் பெரும் வரவேற்பு அளித்தனர்.
இதன்பின் பிந்தரன்வாலேயின் அட்டூழியம் அதிகமாகியது. இந்துக்கள் படுகொலை
செய்யப்பட்டனர். பசுக்களின் தலைகளை வெட்டி இந்து கோவில்களுக்குள்
தீவிரவாதிகள் வீசினர். பத்திரிகையாளர் லாலா ஜெகத்நாராயணனின் மகனையும்
தீவிரவாதிகள் கொலை செய்தனர்.
தனி
சீக்கிய நாடு வேண்டும் என்பதற்காக, ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளைக் கொண்ட
படையை திரட்டினான், பிந்தரன்வாலே. அவர்களிடம் நவீன ஆயுதங்கள் இருந்தன.
அமிர்தசரஸ் நகரில் உள்ள சீக்கியர்களின் பொற்கோவில், புனித இடமாகப்
போற்றப்படுவதாகும். அதை பிந்தரன்வாலே கைப்பற்றிக்கொண்டான். உள்ளே ஆயுதங்கள்
குவிக்கப்பட்டன.
சீக்கியர்
பொற்கோவில், தீவிரவாதிகளின் "கோட்டை"யாக மாறியது. பொதுமக்களை கொன்று
குவித்துவிட்டு, அங்கு ஓடி ஒளிந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டார்கள்
தீவிரவாதிகள். 1984 ஜனவரியில் பாராளுமன்ற கூட்டம் நடந்தபோது, "சீக்கிய
தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவி செய்கிறது" என்று இந்திரா காந்தி குற்றம்
சாட்டினார். அப்போது, உள்துறை மந்திரியாக இருந்த பி.சி.சேத்தி பேசுகையில்,
"சீக்கியர் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி செய்து வருகிறோம்.
சீக்கியர்களின் புனித இடமான பொற்கோவிலுக்குள் தீவிரவாதிகள்
பதுங்கியிருக்கிறார்கள். ஆயினும், பொற்கோவிலுக்குள் ராணுவம் நுழையாது"
என்று கூறினார்.
சஞ்சய்
காந்தியைப்போல ராஜீவ் காந்தி அரசியல் விïகங்கள் வகுப்பதில் வல்லவர் அல்ல
என்று தொடக்கத்தில் அனைவரும் கருதினர். ஆனால் அரசியலில் குதித்த பிறகு,
ராஜீவ் காந்தி மெல்ல மெல்ல அரசியல் நுட்பங்களில் நிபுணராக மாறி வந்தார்.
சீக்கிய தீவிரவாதிகளின் வன்முறை அவருக்குக் கவலை அளித்தது. அவர்களை எப்படி
ஒடுக்கலாம் என்று அருண் நேருவுடன் ஆலோசனை நடத்தினார்.
"பொற்கோவிலுக்குள்
ராணுவத்தை அனுப்பினால்தான், "தீவிரவாதிகளை ஒடுக்க முடியும்" என்ற
முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். அதற்கான திட்டத்தை ரகசியமாகத்
தயாரித்தார்கள். இப்படி ஒரு திட்டம் தயாராவது உள்துறை மந்திரி பி.சி.
சேத்திக்கு தெரியாது; அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜெயில்சிங்குக்குக்கூடத்
தெரியாது. இந்திரா காந்திக்கு இதுபற்றித் தெரியும் என்றாலும்,
"பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்ப வேண்டிய அவசியம் ஏற்படாது. சீக்கியர்
பிரச்சினைக்கு வேறு வழிகளில் சமரசத்தீர்வு காண முடியும்" என்று கருதினார்.
பொற்கோவில்,
சீக்கியர்களின் புனித இடம். அங்கு ராணுவத்தை அனுப்புவதால், விபரீத
விளைவுகள் ஏற்படும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். இதற்கிடையே இந்திரா
காந்தியை அவருடைய நீண்ட கால தோழி புபுல் ஜெயக்கர் சந்தித்தார். அப்போது
இந்திரா மிகவும் சோர்வுடன் காணப்பட்டார். "புபுல்! நான் நிம்மதியாகத்
தூங்கி நீண்ட காலம் ஆகிறது. அடிக்கடி கெட்ட கனவுகள் வருகின்றன" என்று
இந்திரா கூறினார். "கவலைப்படாதே! எல்லாம் சரியாகிவிடும்!" என்று புபுல்
ஆறுதல் கூறினார். தீவிரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகமாகி
வந்தது. 1984 பிப்ரவரியில் இருந்து 4 மாத காலத்தில் தீவிரவாதிகளால்
சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 400_ஐ தாண்டியது. 