'தமிழ்நாடு'
உருவாவதற்கு முன், தமிழகத்தின் எல்லைகளை மீட்பதற்காகச் சிலம்புச் செல்வர்
ம.பொ.சிவஞானம் நடத்திய போராட்டங்கள் வரலாற்று முக்கியம் வாய்ந்தவை. இந்தியா
சுதந்திரம் அடைந்த போது, தமிழ்நாடும், ஆந்திரமும் ஒன்றாக இணைந்த `சென்னை
மாகாணம்' இருந்தது. தமிழ்நாட்டின் சில பகுதிகள், திருவாங்கூர் கொச்சி
சமஸ்தானத்தில் அடங்கியிருந்தன. சங்க கால இலக்கியங்களில், தமிழ் நாட்டின் வட
எல்லை திருவேங்கடம் (திருப்பதி) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளையர்
ஆட்சியில் கூட, 1911 ஏப்ரல் வரை, திருப்பதி மலை வட ஆற்காடு
மாவட்டத்தில்தான் இருந்து வந்தது. ஆனால், தமிழகத்திற்கும்,
ஆந்திரத்திற்கும் எல்லைச் சிக்கலைத் தோற்றுவிக்கும் எண்ணத்துடன், வடஆற்காடு
மாவட்டத்தில் இருந்து சித்தூர், கங்குந்திக்குப்பம், திருத்தணி, புத்தூர்,
பல்லவனேரி, காளத்தி, சந்திரகிரி (திருப்பதி) ஆகிய தாலுகாக்களையும்,
தெலுங்கு பேசப்படும் கர்நூல் மாவட்டத்தில் இருந்து மதனப்பள்ளி, வாயல்பாடி
ஆகிய இரண்டு தாலுகாக்களையும் பிரித்து சித்தூர் மாவட்டம் என்ற பெயரில் இரு
மொழி மாவட்டத்தை உருவாக்கினார்கள்.
சித்தூர்
மாவட்டம் அமைக்கப்பட்ட பிறகும், பல ஆண்டுக்காலம் வேலூர்தான் அதன் தலைநகரமாக
இருந்தது. திருப்பதி வைணவத்திருத்தலமாக இருந்ததாலும், ஆந்திரர்களுக்கு
அதுவே பிரதானக் கோவிலாக விளங்கியதாலும், மெல்ல மெல்ல ஆந்திரர்களின்
ஆதிக்கத்திற்குச் சென்று விட்டது.
இதையெல்லாம்
உணர்ந்திருந்த ம.பொ.சி., இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு மறுநாள்
(16.8.1947) திருப்பதிக்குத் தொண்டர்படையுடன் சென்று, "திருப்பதி
தமிழர்களுக்கே உரியது" என்று ஆர்ப்பாட்டம் நடத்தினார். "கிராமணியே,
திரும்பிப்போ" என்று ஆந்திரர்கள் எதிர்ப் போராட்டம் நடத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து, "திருப்பதி யாருக்குச் சொந்தம்? தமிழர்களுக்கா,
ஆந்திரர்களுக்கா?" என்ற விவாதம் எழுந்தது.
"திருப்பதி
தமிழ்நாட்டுக்கே சொந்தம்" என்று ம.பொ.சி. தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்.
"தமிழர்களுக்கு திருப்பதி கிடைக்காது. தமிழர்களிடமிருந்து சென்னையையும்
பறிப்போம்" என்றார், ஆந்திரத் தலைவர், என்.ஜி.ரங்கா. அவர் சொன்னது
உண்மையாயிற்று. சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திராவைப் பிரித்து, தனி ஆந்திர
மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தபோது, சென்னை நகரம் தங்களுக்கு
வேண்டும் என்று ஆந்திரர்கள் கோரினர்.
இதற்கு
எதிராகத் தமிழகமே பொங்கி எழுந்தது. "தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக்
காப்போம்" என்று முழங்கினார், ம.பொ.சி. "சென்னை நகரம், தமிழ்நாட்டுக்கே
சொந்தம்" என்று சென்னை மாநகராட்சியும் தீர்மானம் நிறைவேற்றியது. சென்னை
நகரம் தங்களுக்குக் கிடைக்காது என்பதைத் தெரிந்து கொண்ட ஆந்திரர்கள், சில
காலத்திற்கு தற்காலிகமாக சென்னையைத் தங்கள் தலைநகராக வைத்துக்கொள்ள
அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.
அந்தக்
கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. இந்த நிலையில், சித்தூர் மாவட்டம் முழுவதும்
ஆந்திராவுக்கு போய்விடக்கூடிய நிலைமை உருவாயிற்று. அதை எதிர்த்து 1953 மே
மாதத்தில் திருத்தணியில் ம.பொ.சி. மறியல் போராட்டம் நடத்தினார். மறியல்
செய்தவர்களைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.
எல்லையை
மீட்கும் வரை போராட்டம் நீடிக்கும் என்று, ம.பொ.சி. அறிவித்திருந்தார்.
ராஜாஜி விடுத்த வேண்டுகோளின்படி, போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி
வைக்கப்பட்டது. திடீரென்று திருத்தணியில் வாழும் தமிழ் இளைஞர்கள்,
ஆந்திரர்களைக் கண்டித்து வன்முறையில் இறங்கினர். ஊராட்சி மன்ற
கட்டிடத்துக்குள் புகுந்து வானொலிப் பெட்டியை உடைத்தனர். ரெயில் நிறுத்தப்
போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
அதனால் போலீசார்
தடியடி நடத்தினர். வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று ம.பொ.சி. வேண்டுகோள்
விடுத்தார். அதைத் தொடர்ந்து அமைதி திரும்பியது. வடஎல்லைப்
பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு மத்திய அரசு முன்வராததால், ஜுலை
2-ந்தேதி திருத்தணிக்கு ம.பொ.சி. சென்றார். தடை உத்தரவை மீறி, மறுநாள்
மறியல் செய்தார்.
அவரை போலீசார் கைது செய்தனர்.
கோர்ட்டில் அவருக்கு 6 வார ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
சுதந்திரப்போரில் 6 முறை சிறை சென்ற ம.பொ.சி., இப்போது 7-வது முறையாக சிறை
சென்றார். இதற்கிடையே, பிரதமர் நேருவுடன் அன்றைய முதல் அமைச்சர் ராஜாஜி
பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில், "சித்தூர் மாவட்டத்தில் தமிழர் கோரும்
தாலுகாக்கள் பற்றி விசாரிக்க, விரைவில் எல்லைக் கமிஷன் அமைக்கப்படும்.
இதற்காகப்
போராட்டம் அவசியம் இல்லை" என்று நேரு அறிக்கை விடுத்தார். அதைத்தொடர்ந்து 5
நாள் சிறைவாசத்துக்குப்பின் ம.பொ.சி. விடுதலையானார். திருவாங்கூர்
கொச்சி சமஸ்தானத்தில் இணைந்திருந்த தமிழ்ப்பகுதிகளை மீட்க, 1954 ஜுன்
மாதத்தில் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான நேசமணி தலைமையில்
போராட்டம் நடந்து வந்தது.
இந்தப் போராட்டத்தில் நேச
மணி சிறை சென்றார். சிறையிலிருந்த நேச மணி, ம.பொ.சிக்கு தந்தி
அனுப்பினார். மூணாறு விரைந்தார், ம.பொ.சி. அவர் முன்னிலையில்
சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்ந்து நடந்தது. ஆகஸ்ட் 11-ந்தேதி, தென்
திருவாங்கூரில் உள்ள கல்குளம் தாலுகாவில், நேசமணி கைது செய்யப்பட்டதற்கு
கண்டனம் தெரிவித்து மாபெரும் ஊர்வலம் நடந்தது.
அந்த
ஊர்வலத்தைக் கலைக்க மலபார் ரிசர்வ் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11
தமிழர்கள் உயிரிழந்தனர். இதனால் திருவாங்கூர் கொச்சி மாநிலத்தில் பல்வேறு
இடங்களில் கலவரங்கள் நடந்தன. அதைத் தொடர்ந்து 1955 பிப்ரவரி இரண்டாவது
வாரத்தில் பட்டம் தாணுப்பிள்ளையை முதல்வராகக் கொண்ட பிரஜா சோசலிஸ்டுக்
கட்சி மந்திரிசபை கவிழ்ந்தது.
எல்லைகளைத் திருத்தி
அமைக்க மத்திய அரசு அமைத்த பசல் அலி கமிஷன் 1955 இறுதியில் தனது தீர்ப்பை
மத்திய அரசிடம் வழங்கியது. திருவாங்கூர் கொச்சியில் உள்ள தமிழ் வழங்கும்
தாலுகாக்களான செங்கோட்டை, கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீஸ்வரம் ஆகிய
ஐந்து தாலுகாக்களை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று கமிஷன்
தீர்ப்புக் கூறியது.
75 சதவீதம் தமிழர்கள் வாழும்
தேவி குளம் பீர்மேடு தாலுகாக்களை தமிழகத்துடன் சேர்க்க கமிஷன் மறுத்து
விட்டபோதிலும், இந்தியாவின் தென் எல்லையான குமரிமுனை தமிழகத்திற்கு
கிடைத்தது. தமிழக ஆந்திர எல்லைப் பிரச்சினையைச் சமரசப் பேச்சு நடத்தித்
தீர்த்துக் கொள்வதாக இரு மாநில அரசுகளும் கூறிவிட்டதால், அதுபற்றிப் பசல்
அலி கமிஷன் முடிவு எதையும் கூறவில்லை.
தமிழக ஆந்திர
அரசுகளின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் மீண்டும் எல்லைக்
கமிஷன் அமைக்கவேண்டும் என்று நீதிபதி பசல் அலி குறிப்பிட்டிருந்தார்.
எல்லைப் பிரச்சினையில் தமிழக ஆந்திர அரசுகள் இடையே உடன்பாடு ஏற்படாததால்
படாஸ்கர் தலைமையில் மீண்டும் கமிஷன் அமைக்கப்பட்டது.
1.4.1960-ல்
படாஸ்கர் வழங்கிய தீர்ப்பின்படி, திருத்தணி தாலுகா முழுவதும்
தமிழ்நாட்டுக்குக் கிடைத்தது. புத்தூர், சித்தூர் தாலுகாக்களில் இருந்து
சில கிராமங்கள் தமிழ்நாட்டுக்கு மாற்றப்பட்டன.