நீ மேலே உயரும்போது நீ யார் என்று உன் நண்பர்கள் அறிந்து கொள்வார்கள் நீ கீழே போகும்போதுதான் உண்மையான நண்பர்கள் யார் என்று நீ அறிந்து கொள்வாய்...

4.08.2012

சோவியத் ரஷியா உடைந்து சிதறியது

சோவியத் ரஷியா உடைந்து சிதறியது
  உலக வல்லரசுகளில் ஒன்று ரஷியா. சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பு கம்யூனிஸ்டு கட்சியின் தந்தையான லெனின், ரஷியாவை உருவாக்கினார். கம்யூனிஸ்டு கொள்கைகளை அடிப்படையாக கொண்ட சோசலிஸ்டு நாடு (யு.எஸ்.எஸ்.ஆர்) என்று அழைக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போருக்கு பிறகு அண்டை நாடுகளைச்சேர்ந்த பல பகுதிகளையும், சில குட்டி நாடுகளையும் இணைத்துக் கொண்டது.
 
இதனால் ரஷியா உலகின் மிகப் பெரிய நாடாக விளங்கியது. இதன் நிலப்பரப்பு ஐரோப்பா, ஆசியா ஆகிய இரு கண்டங்களிலும் பரவி இருந்தது.   இந்த சோவியத் யூனியனில் கம்யூனிஸ்டு ஆட்சி நடைபெற்றது. இந்த நாட்டுக்குள் என்ன நடைபெறுகிறது என்பது வெளி உலகுக்கு தெரியவராது. இதனால் "இரும்பு திரை" நாடு என்று வர்ணிக்கப்பட்டது.  
 
ரஷியக் கூட்டமைப்பில், ரஷியா, பைலோருஷியா, அர்மீனியா, அஜர்பைஜான், உஸ்பெக்கிஸ்தான், துர்க் மேனிஸ்தான், தஜிக்ஸ்தான், கஜகஸ்தான், கீர்க்கிஸ்தான், ஜார்ஜியா, உக்ரைன், மால் டோவியா, எஸ்டோனியா, லட்வியா, லிதுவேனியா ஆகிய 15 மாநிலங்கள் இருந்தன. இதில் இடம் பெற்ற லிது வேனியா, லட்வியா, எஸ் டோனியா ஆகிய மாநிலங்கள் (இதற்கு பால்டிக் நாடுகள் என்று பெயர்) ஸ்டாலின் ஆட்சி காலத்தில் ரஷியாவுடன் இணைந்தன.
 
ரஷிய அதிபராக 1984ம் ஆண்டு கார்பசேவ் பதவி ஏற்றார். அவர் பல சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்தார். சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கம்யூனிஸ்டு ஆட்சியின் அதிகாரபிடியை தளர்த்திய தோடு, உலக அமைதி முயற்சியிலும் இறங்கினார். அணு ஆயுதங்களை ஒழிக்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்தார்.
 
இதனால் சமாதானத்துக்கான நோபல் பரிசு அவருக்கு கிடைத்தது. உலக நாடுகளில் அவர் புகழ் ஓங்கியது. 6 ஆண்டுகள் சுமுகமாக நகர்ந்தன.   ஆனால் எதிர்பாராத சூழ்நிலையால் ரஷியாவில் உணவு தானிய தட்டுப்பாடு ஏற்பட்டது. உள்நாட்டில் அவருக்கு எதிர்ப்பு கிளம்ப தொடங்கியது. 1991ம் ஆண்டு மத்தியில் அது உச்ச கட்டத்தை அடைந்தது. 
 
கார்பசேவ் ஜனாதிபதி ஆகும் வரை இருந்த பல்வேறு அதிபர்களிடமும் அதிகாரம் குவிந்து இருந்ததாலும், உலகின் மிகப் பெரிய வல்லரசாக ரஷியா திகழ்ந்ததாலும், இணைந்து இருந்த குட்டி நாடுகள் பிரிந்து போக ஆசைப்படாமல் இருந்தன. கார்பசேவ் அதிபரானது முதல் அவரது அமைதிக் கொள்கையும், உணவுத் தட்டுப்பாடும் பல மாநிலங்களுக்கு பிரிந்து போகும் எண்ணத்தையும், தைரியத்தையும் கொடுத்தன.
 
பால்டிக் நாடுகள் எனப்படும் லிதுவேனியா, லட்வியா, எஸ்டோனியா ஆகிய மாநிலங்கள் முதல் சுதந்திர குரலை எழுப்பின. அதன் பிறகு ஜார்ஜியாவும் சுதந்திரம் கோரியது. சுதந்திரம் கோரி போர்க்கொடி உயர்த்திய மாநிலங்கள் இந்த 4 மாநிலங்களும் சுதந்திரப் பிரகடனம் செய்தன. இவற்றுக்கு தூதரக அங்கீகாரம் வழங்க ஜப்பான், பிரான்சு, இங்கிலாந்து, போலந்து, நார்வே, ஐஸ்லாந்து, டென்மார்க், பின்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகள் முன்வந்தன.
 
பால்டிக் நாடுகளுக்கு விரைவில் சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும் என்று ரஷியாவை அமெரிக்கா வலியுறுத்தியது.   சில மாநிலங்கள் சுதந்திர பிரகடனம் செய்ததது கார்பசேவுக்கு தலைவலியைக் கொடுத்தது. எனவே, அதிகாரங்களை பரவலாக்கி மாநிலங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவு செய்தார். கம்யூனிஸ்டு கொள்கையில் தீவிரம் கொண்ட முன்னணி தலைவர்கள் சிலருக்கு இது பிடிக்கவில்லை.
 
கார்பசேவினால் பதவியில் அமர்த்தப்பட்டவர்களே அவருக்கு எதிராக ஆட்சியை கவிழ்க்க முயன்றனர். திடீரென்று கார்பசேவ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். பாராளுமன்றத்தை கைப்பற்ற முயற்சி செய்தனர்.   கம்யூனிஸ்டு தீவிரவாதிகளின் முயற்சியை ரஷிய மாநில ஜனாதிபதியாக இருந்த எல்ட்சின் எதிர்த்து நின்றார். கம்யூனிஸ்டு ஆட்சி முறையால் ஏமாற்றம் அடைந்து இருந்த மக்கள் கம்யூனிஸ்டு தீவிரவாதிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
 
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு எதிராக துப்பாக்கியைத் தூக்க ராணுவம் மறுத்து விட்டது. இதனால் கம்யூனிஸ்டு தீவிரவாதிகளின் முயற்சி தோற்றுப்போனது. கார்பசேவ் விடுவிக்கப்பட்டார். புரட்சியை நடத்திய 8 முன்னணி தலைவர்களின் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. 6 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
 
புரட்சி தோல்வி அடைந்ததால் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். புதிய பிரதமர் மற்றும் மந்திரிகளை கார்பசேவ் நியமித்தார். அவருக்கு கம்யூனிஸ்டு உயர்மட்ட குழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதனால் கார்பசேவ்வின் தலைமை பலவீனம் அடைந்தது.   இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஆர்மீனியா, மால்டோவியா, பைலோருஷியா, உஸ்பெக்கிஸ் தான், உக்ரைன் ஆகிய 5 மாநிலங்களும் சுதந்திர பிரகடனம் வெளியிட்டன.
 
சுதந்திர நாடுகளாக பிரகடனப்படுத்தப்பட்ட மாநிலத் தலைவர்களின் மாநாடு, கஜகஸ்தான் மாநில தலைநகரான அல்மா டாவில் நடந்தது. மொத்தம் உள்ள 15 மாநிலங்களில் பால்டிக் பகுதியைச்சேர்ந்த லிதுவேனியா, எஸ்டோனியா, லட்வியா ஆகியவை இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. ரஷியா, உக்ரைன், கஜகஸ் தான், அஜர்பைஜான், அர் மினியா உள்பட 11 மாநிலங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
 
இந்த 11 மாநிலத் தலைவர்களும் கூடி, தங்கள் மாநிலங்கள் சுதந்திர நாடுகள் என்றும், சோவியத் ïனியன் மறைத்து விட்டது என்றும் பிரகடனப்படுத்தினர். "காமன்வெல்த்" என்ற பெயரில் ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்திக்கொள்வது என்றும் தீர்மானித்தனர். இந்த 11 மாநில தலைவர்கள் சார்பில் எல்ட்சின், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-  
 
"புதிய கூட்டமைப்பில் கார்பசேவுக்கு இடம் கிடையாது. அவர் பதவி விலக வேண்டியதுதான். சாகும் வரை பதவியில் இருப்பது என்ற மரபு 1920ல் தொடங்கியது. அதற்கு முற்றுப் புள்ளி வைக்க விரும்புகிறோம். சோவியத் யூனியனுக்கு சொந்தமான அணு ஆயுதங்களும், அணு உலைகளும் பல்வேறு நாடுகளில் சிதறிக் கிடக்கின்றன.
 
அவற்றை 11 நாட்டுத் தலைவர்களும் கூட்டாக கட்டுப்படுத்துவார்கள். காமன்வெல்த் கூட்டமைப்பின் உயர் தலைமை பீடமாக 11 நாட்டு ஜனாதிபதிகளின் குழு இருக்கும். சம வாய்ப்பு, சம அந்தஸ்து அளிக்கப்படும். ஐ.நா. பாதுகாப்பு சபையில் சோவியத் னியனுக்குப் பதிலாக ரஷியா இடம் பெறும்."
 
இவ்வாறு எல்ட்சின் கூறினார்.  
 
இதனால் சோவியத் னியன் கலைக்கப்பட்டது. அதன் அதிபரான கார்பசேவும் தனது பதவியை டிசம்பர் 25ந்தேதி இரவு ராஜினாமா செய்தார். டெலிவிஷன் மூலம் கார்பசேவ் தனது ராஜினாமாவை அறிவித்தார். "நான் ராஜினாமா செய்வது என்ற தீர்மானத்துக்கு வந்தது தவிர்க்க முடியாதது" என்று கூறினார். புதிய கூட்டமைப்புக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
 
சோவியத் னியனில் இருக்கும் 30 ஆயிரம் அணு ஆயுதங்களின் "சுவிட்ச்" அதுவரை கார்பசேவிடம் இருந்தது. அவர் பதவி விலகியதும் "சுவிட்"சை ரஷிய ஜனாதிபதி எல்ட்சினிடம் ஒப்படைத்தார். கார்பசேவ் ரஷியாவில் உள்ள பிரிவோல்னயா என்ற கிராமத்தில் 1931ம் ஆண்டு மார்ச் 2ந்தேதி பிறந்தார். பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, மாஸ்கோ பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றார்.
 
மாணவ பருவத்திலேயே பொது வாழ்வில் ஈடுபட்ட அவர் 21ம் வயதில் கம்யூனிஸ்டு கட்சியில் உறுப்பினரானார். பிறகு கட்சியின் முக்கிய பொறுப்புகளை ஏற்றார். ராஜினாமா செய்த கார்பசேவுக்கு மாதா மாதம் ரூ.1 லட்சம் பென்ஷனாக வழங்கப்படும் என்றும், அவர் வசிப்பதற்கு அரசாங்க வீடும், கோடை காலத்தில் ஓய்வு எடுப்பதற்கு குளிர்பிரதேசத்தில் ஒரு வீடும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.