நீ மேலே உயரும்போது நீ யார் என்று உன் நண்பர்கள் அறிந்து கொள்வார்கள் நீ கீழே போகும்போதுதான் உண்மையான நண்பர்கள் யார் என்று நீ அறிந்து கொள்வாய்...

4.08.2012

சந்தனக் கடத்தல் வீரப்பன் போல போலீசுக்கு சவாலாக விளங்கிய மம்பட்டியான் ஒரே சமயத்தில் 9 பேரை கொன்றான்

சந்தனக் கடத்தல் வீரப்பன் போல போலீசுக்கு சவாலாக விளங்கிய மம்பட்டியான் ஒரே சமயத்தில் 9 பேரை கொன்றான்
சந்தன கடத்தல்காரன் வீரப்பனைப்போல, 50 ஆண்டுகளுக்கு முன்பு போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி, மக்களிடம் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தவன் மம்பட்டியான். இந்த மம்பட்டியானை கதாபாத்திரமாக வைத்து, "மலையூர் மம்பட்டியான்" என்ற பெயரில் சினிமாப்படம் வெளிவந்தது. தியாகராஜன் சரிதா நடித்த இந்தப்படம் ஓகோ என்று ஓடி வசூலை வாரிக் குவித்தது நினைவிருக்கலாம்.
 
மம்பட்டியான் சாதாரண ஆள் அல்ல. 27 கொள்ளை, 9 கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவன். போலீஸ்  கண்களில் மிளகாய்ப் பொடியை தூவி விட்டு காடுகளில் 5 ஆண்டு காலம் தலைமறைவாக வாழ்ந்தவன். ஆனால் காதல் மோக உருவில் எமன் அவனுடைய உயிரை பறித்துக்கொண்டான். சுருக்கமாக சொன்னால் மம்பட்டியானின் வாழ்க்கை, மர்ம கதைகளில் வரும் சம்பவங்கள் போல இருக்கும்.
 
மம்பட்டியானின் உண்மை பெயர் அய்யாத்துரை. சேலம் மாவட்டம் மேச்சேரி போலீஸ் சரகம் கொல்காரனூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவன். தந்தை பெயர் மொட்டையன். மம்பட்டியானுக்கு 2 மனைவிகள். மூத்த மனைவியின் பெயர் சின்னப்பிள்ளை என்கிற நல்லம்மாள். இவளுக்கு நல்லப்பன் என்ற மகனும், பாப்பா என்ற மகளும் இருந்தனர்.
 
2வது மனைவி மாந்தியம்மாள். இவளுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருந்தார்கள். அவனுக்கு சகோதரனும் இருந்தான். அவனுடைய பெயர் ஊமையன்.   மம்பட்டியான் நெடுஞ்சாலைத்துறையில் கூலி வேலை செய்து வந்தவன். எப்போதும் தோளில் மண்வெட்டியை சுமந்தபடியே திரிவான். அவனது முகத்தில் கீழ் தாடை பகுதியும், மண்வெட்டி போல குவிந்திருக்கும்.
 
இவற்றையெல்லாம் வைத்து அவனுக்கு நெருக்கமானவர்கள் "மம்பட்டியான்" என்று அழைத்தார்கள். நாளடைவில் அய்யாத்துரை என்பது மாறி மம்பட்டியான் என்ற பெயரே நிலைத்தது. போலீஸ் ரிக்கார்டுகளிலும் மம்பட்டியான் என்றே பதிவானது. மம்பட்டியானை சுற்றி எப்போதுமே இளைஞர் பட்டாளம் இருந்து கொண்டே இருந்தது.
 
இதுவே அவனை கோஷ்டி தலைவனாக உயர்த்தியது. தொடக்கத்தில் மனைவி, குழந்தை, குடும்பம் என்றிருந்த மம்பட்டியான் வாழ்க்கை, திடீரென்று தடம் புரண்டது. அடிதடி  மோதல், போலீஸ் வழக்கு என்று சிக்குண்டான். போகப்போக அவை கொலைகாரன், வழிப்பறி கொள்ளைக்காரன் என்ற நிலைக்கு கொண்டு போய்விட்டது. 
 
மம்பட்டியான் வாழ்ந்த அதே ஊரில் மாரிமுத்துசாமி, முத்து சாமி என்ற மிராசுதாரர்கள் வாழ்ந்தார்கள். இருவரும் நெருங்கிய உறவினர்கள். இந்த இருவருக்கும் அடுத்தடுத்து நிலம் இருந்தன. அந்த பண்ணை நிலத்தில் வீடு கட்டி குடியிருந்தும் வந்தார்கள். அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மேச்சேரி என்ற ஊர் இருக்கிறது.
 
ஆடி மாதம் மாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த திருவிழாவில் "வண்டி வேஷம்" என்ற நிகழ்ச்சி விசேஷமாக இடம் பெறும். அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில், "ராமாயணம்", "மகாபாரதம்" போன்றவைகளில் வரும் கதாபாத்திரங்கள் போல வேடமிட்டு செல்வார்கள். இதற்கு மாரிமுத்துசாமி, முத்துசாமி இருவருமே ஒன்றாக இணைந்து ஏற்பாடு செய்வார்கள்.
 
திருவிழாவுக்கு சேர்ந்தே சென்று திரும்புவார்கள். கொஞ்ச நாளில் இருவருமே தனித்தனி ஏற்பாடு செய்தார்கள். ஆனாலும் ஒன்றாகவே மாட்டு வண்டி கட்டி திருவிழாவுக்கு செல்வார்கள். இந்த நிலையில் திருவிழா நடைபெறும்போது முத்துசாமி பெட்டிக்கடை போடுவார். அதில் நல்ல வியாபாரம் ஆகி பணம் குவிந்தது.
 
இதனால் அவருடைய கை ஓங்கியது. இது இருவருக்கும் இடையே மனக்கசப்பை ஏற்படுத்தியது. தனித்தனி கோஷ்டியாக செயல்படத் தொடங்கினார்கள். அப்போது மம்பட்டியானும், அவனது அண்ணன் ஊமையன், தந்தை மொட்டையன் ஆகியோர் மாரிமுத்துசாமிக்கு ஆதரவாக இருந்தனர்.
 
1956ம் ஆண்டு திருவிழாவுக்கு முத்துசாமியும் ஆதரவாளர்களும் புறப்பட்டு சென்றபோது மாரிமுத்துசாமியின் கோஷ்டி வழி மறித்து கற்களை வீசி தாக்கியது. இதனால் அந்தப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டார்கள். திருவிழாவில் பெரிய மோதல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வேடம் போட்டு ஆடுவதற்கும் இரு தரப்பினருக்கும் தடை போடப்பட்டது.
 
இந்த சம்பவங்கள் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்றது. ஆனாலும் பகை புகைந்து கொண்டே இருந்தது.   முத்துசாமியின் மூத்த மகன் பழனி கவுண்டர் தென்னந் தோப்புக்குச் சென்று கொண்டிருந்தபோது தாக்கப்பட்டார். மம்பட்டியான் உள்பட 17 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் அனைவரும் விடுதலையானார்கள். 30.5.1957 அன்று கோர்ட்டில் இருந்து திரும்பும்போது மம்பட்டியானின் தந்தை மொட்டையன் மற்றும் உறவினர் பொன்னு கவுண்டர் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 
இந்த வழக்கில் முத்துசாமி கோஷ்டியைச் சேர்ந்த 9 பேருக்கு தலா 3 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைத்தது. தந்தை கொலையுண்டதால் மம்பட்டியான் ஆத்திரத்துடன் திரிந்தான்.   இந்த நிலையில் 2.8.1959 அன்று முத்துசாமியும், அவனது மகன்களும் மேச்சேரியில் கடையில் உட்கார்ந்து வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்தனர். அங்கு திரளாக கூட்டம் இருந்தது.
 
காலை சுமார் 11 மணி இருக்கும். மம்பட்டியானும், அவனது கோஷ்டியும் பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். கடையில் இருந்தவர்களை சரமாரியாக வெட்டினார்கள். இதில் முத்துசாமி, அவரது மகன்கள் வேலாயுதம், சின்னக்குட்டி, வைத்தி ஆகிய 4 பேரும் அதே இடத்தில் துடிதுடித்து செத்தனர். இன்னொரு மகன் பரமசிவம் வெட்டுக்காயங்களுடன் ஓடி அருகில் இருந்த வீட்டிற்குள் நுழைந்தார்.
 
அவரை மம்பட்டியான் கோஷ்டி விரட்டிச்சென்று தேடியது. அந்த வீடு முழுவதும் சோதனை போட்டது. அந்த வீட்டுக்காரப்பெண் தந்திரமாக பரமசிவத்தை ஒரு பெரிய பாத்திரத்தை போட்டு மூடி வைத்துவிட்டாள். இதனால் பரம சிவம் கொலைகாரக் கும்பலிடம் இருந்து உயிர் தப்பினார். (இவர் பிற்காலத்தில் தாரமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. ஆனார்.)
 
பிறகு மம்பட்டியான், அவனுடைய அண்ணன் ஊமையன் உள்பட 7 பேர் சொந்த ஊருக்கு திரும்பிச்சென்று முத்துசாமியின் உறவினர்களை வீடு வீடாக புகுந்து தாக்கினார்கள். சுப்பிரமணியம் என்பவரை தாக்கி கொன்றனர். அவர் இருந்த தறி கொட்டகையையும் தீ வைத்து கொளுத்தினர். பிணம் தீயில் எரிந்து கரிக்கட்டையானது. அயுண்டன், பச்சான் மேலும் 2 பேரும் படுகொலை செய்யப்பட்டனர்.
 
சுமார் ஒரு மணி நேரத்தில் 9 பேரை கொன்று மம்பட்டியான் பழிக்குப்பழி தீர்த்தான். கொலை படலத்தை முடித்ததும் மம்பட்டியான் கோஷ்டி காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டது. இந்த படுகொலை சேலம் மாவட்டத்தையே உலுக்கியது. சம்பவ இடத்தை கலெக்டர் அம்புரோஸ், போலீஸ் அதிகாரி ஏ.சி.ஆதித்த நாடார் ஆகியோர் சென்று பார்வையிட்டார்கள். மம்பட்டியான் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடினார்கள்.  
 
காட்டில் மறைந்து வாழ்ந்த அந்த சமயத்தில் மம்பட்டியான் கொள்ளைக்காரனாக மாறினான். மேச்சேரி, பெண்ணாகரம், கொல்லேகால் ஆகிய பகுதிகளில் ஊருக்கு வெளியே இருக்கும் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்தான். தனியாக வரும் ஆட்களை மிரட்டி வழிப்பறி கொள்ளை நடத்தினான். இப்படி 2 ஆண்டுகள் வரை மம்பட்டியானும், அவனது அண்ணன் ஊமையனும் ஒன்றாக காட்டில் திரிந்தனர்.
 
திடீரென்று அண்ணன் _ தம்பிக்குள் மோதல் ஏற்பட்டது. மம்பட்டியானை விட்டு ஊமையன் பிரிந்தான்.   இந்த தகவலை அறிந்த போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள். 6.3.1961 அன்று சப் இன்ஸ்பெக்டர்கள் தவுலத் அலி, நாகராஜன் ஆகியோர் தலைமையில் ஆயுதப்படை போலீசார் மேச்சேரி அருகில் காட்டுக்குள் நுழைந்து தேடினர். அங்கு பதுங்கி இருந்து ஊமையனைச் சுற்றி வளைத்தனர்.
 
அங்கு நடந்த துப்பாக்கி சண்டையில் ஊமையன் சுட்டுக் கொல்லப்பட்டான்.   மேட்டூர் பகுதியில் மம்பட்டியான் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. 8.7.1963 அன்று சப்இன்ஸ்பெக்டர் மயில் சாமி தலைமையில் போலீஸ் படை மேட்டூரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தண்டைக்காய் மலைக்கு சென்றனர். அங்கு மம்பட்டியான் கோஷ்டி சமையல் செய்து கொண்டிருந்தனர்.
 
இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் மம்பட்டியானின் கோஷ்டியைச் சேர்ந்த கண்ணு போயன், கோவிந்தன் ஆகியோர் கொல்லப்பட்டனர். சப் இன்ஸ் பெக்டர் மயில்சாமி குண்டு பாய்ந்து காயம் அடைந்தார். மம்பட்டியானும், வேறு சிலரும் ஓடினார்கள். போலீசார் விரட்டிச்சென்று 2 பேரை பிடித்தார்கள். ஆனால் மம்பட்டியான் போலீசிடம் சிக்காமல் தப்பி விட்டான்.